Posts

Showing posts from September, 2016

இரவுப்பூனைகள்

Image
சத்தமில்லாத இருளில்  உள் நுழைகிற பூனை   உன் நினைவு  பூனையின் ஒவ்வொரு  அடி நகர்தலும்  நம் சந்திப்பின்  ஒவ்வொரு கணங்கள்  இருளில் ஒளிரும்  அதன் கண்கள் மட்டும்  நம் காதல்  அது கொட்டிக்குடித்து  சிந்திய பால்குவளை  நமக்குள் இன்னும் கழியா  ஏக்கப் பிரியம்   வயிறு உப்ப அருந்தி  உறங்கும் இரவுப்பூனை  நமது நிறைவேறாக்  கனவின் நிழல்  இரவுப்பூனைகள்  நம் அகத்தின்  காட்சிப்படுத்தல். 

சதுர்த்தி

Image
களைகட்டத் தொடங்கியிருந்தது சதுர்த்தியின் திருவிழா அங்கு  தொலைவு தேசத்தில்  நினைவில் நிற்பதில்லை  எந்தவொரு  பிறந்தவூர் விழாவும்  காரணங்களை  வரிசைப்படுத்துவதில்  கவனமில்லை  கணபதியின் தோற்றம் குறித்த புரிதலும்  காரணமாயிருக்கலாம்  சொந்தங்களின்  கொண்டாட்ட  புகைப்படத்திலிருந்த  பலகாரங்களைப் பார்த்துவிட்டு  "கொழுக்கட்டைன்னா என்னப்பா" என  அவள் கேட்ட கேள்விக்கு  "அது கேக் மாதிரி ஒரு பண்டம்டா" எனக் கூறி தப்பித்த  அந்த ஒரு கேள்வி நினைவிலின்றி  கடந்து போகும் இவ்விழாவை  மறக்கமுடியாததாக்கியிருக்கிறது  இவ்வருடம்.