Posts

Showing posts from June, 2016

மயான வாசம்

Image
நேற்றுவரை உணராத கரப்பான் பூச்சிகளின் உமிழ்நீர் வாசனையை நாசி உணரத் துவங்குகையில் வீடு வெறுமையாயிருக்கிறது அகம் அமைதியாயிருக்க அவள்கள் புழங்கிய வீடு அப்படியே கிடக்கட்டும் அழகான அழுக்குகளோடு குவிந்து கிடக்கும் அணிந்த துணிகளில் அவள்களின் வாசனையை நுகர்ந்து வாழ்வதே இனி உயிர்காக்கும் கிறுக்கிய சுவரில் கிழிந்த அடுப்புத்துணியில் எச்சில் ஒழுக உறங்கிக்கிடந்த ஒற்றைத் தலையணையில் என அவள்களைத் தேடிஅலைவதே என் மனிதனுக்கு சாபம் கவிஞனுக்கு வரம் மெத்தென்ற விரல்களை நானும் ரோமக்கன்னங்களை அவளும் தழுவி நேரும் உறக்கங்கள் இனி வாய்ப்பது அரிது இரெண்டொரு வாரங்களுக்கு கணிப்பொறி பார்த்து காய்கின்ற கண்களுக்கு உலராதிருக்க இனி அவ்வப்போது பிரிவாற்றாமையின் கண்ணீர் கிட்டும் மனதை அனுப்பிவிட்டு உடலாய்  வந்த உயிர் ஊமையாய் உலாவும் வினோதம் நிகழும் இனி உருக்குலைக்கும் உயிரருக்கும் தனிமை தவிர்க்க - இனி தரணி தழுவ எத்தனிக்கவேண்டும் மனைவியும் மகளும் இல்லாதவொரு வீட்டினை மயானமின்றி வேறேன்னவென்று சொல்ல..  

இறைவி - கண்டிப்பாக தரிசிக்க வேண்டியவள்

Image
"என்னவே புள்ள அழுதுகிட்டே இருக்கு, மனுஷன் தூங்க வேண்டாமா எடுத்துகிட்டு வெளியிலே போவே, மனுசன் நாளைக்கு வேலைக்கு போவேண்டாமா?"... எங்கே எடுத்துகிட்டு போறது... பகல் பூராம்  நாங்களும் தான் வேலைசெஞ்சோம்...எங்களுக்குத்தான் தூக்கம் வருது... நாங்க யாருகிட்ட சொல்ல" இது பால்யத்தின் இரவில் அடிக்கடி கேட்ட உரையாடல். இன்றும் சில சமயங்களில் உபயோகிக்கிற உரையாடல். இது போன்று எத்தனையோ உரையாடல்கள். அசரீரி மாதிரி ஒலித்துக் கொண்டே இருந்த சூழ்நிலைகளவை.   உண்மையை சொல்லவேண்டுமானால் பெரும்பான்மைக்கும் அதிகமான ஆண்கள் ஆணாதிக்கவாதிகள் தான் என்னையும் சேர்த்து. சிறுவயதில் கிராமத்தில் அம்மா காலையிலேயே எழுந்து வாசல் கூட்டி, சாணம் தெளித்து கோலமிட்டு, அடுப்பு மொழுகி, காப்பி போட்டு எல்லோரையும் எழுப்புவார். அப்பா எழுந்து குளிக்கப் போயிருப்பார். நாங்கள் யாருமே, ஏன் அம்மா அதிகமாக உழைக்கிறார் என்று யோசித்தது இல்லை. காரணம் எல்லா அம்மாக்களுமே அப்படித்தான் இருந்தார்கள்..இப்பவும் இருக்கிறார்கள்.. ஆணென்பவன் வெளியில் சென்று உழைத்து ஊதியம் பெறுகின்ற காரணத்தால் அன்று சமூகம் அப்படி இருந்தது என்று...