அனுப்பப்படாத புகைப்படம்
இருளில் தொடங்கி
இருளிலிலேயே முடிகின்ற
வாழ்வைப் புரிந்தவனுக்கு
அந்த அனுப்பப்படாத
புகைப்படம் குறித்த சிந்தனை
தினமும் ஒளிர்விடுகிறது!
அந்தப்பக்கம் அனுப்பாமலிருக்க
ஆயிரம் எண்ணங்களும்
இப்போதாவது வந்துவிடாதா என
இந்தப்பக்கம் ஆயிரம் எண்ணங்களும்
அலையடிக்க
கரைகிறது பிரியம்
தேன்கூட்டிலிருந்து வழியும் தேன் துளியாய்!
புகைப்படக்காரனுக்குத் தானே தெரியும்
பிரியத்தின் ஒற்றைமுகம் தாங்கிய
புகைப்படம் விரிக்கும் உணர்வுகளும்
அனுப்பாத புகைப்படம் விரிக்கும்
ஆயிரம் சிந்தனைகளும்!
அனுப்பாத சிந்தனைகளில்
மனமெடுத்த ஆயிரமாயிரம்
புகைப்படக் குவியல்களை
நகலெடுத்து கொடுக்கின்ற
கொடுப்பினை வாய்த்தால்!
பகிர்கின்ற அக்கணம்
வழிந்தோடப்போகும்
அவளது பிரியத்தை
வாழ்நாள் முழுமைக்குமாய்
சேகரித்து வைக்க
வல்லமை வாய்க்க வேண்டும்!.
Comments
Post a Comment