Posts

Showing posts from February, 2016

நேற்று அப்படித்தான் இருந்தது

Image
நேற்று அப்படித்தான் இருந்தது குளிருக்கு முந்தைய  பொழுதிலேயே நீ வருவதாய்  சொல்லியிருந்தாய்  மனதுக்கு கம்பளி  போர்த்த தொடங்கியிருந்தேன்  நீ வந்த பொழுதில்  உள்ளும் புறமும்  என்னை உளரச் செய்துகொண்டு குளிரும் இருந்தது இறுதியில் நீயும் வந்தாய்  அருகினில்  அணைக்கும் தொலைவிலிருந்தும்  நீயே தெரியாதவாறு  சூழ்ந்திருந்தது குளிர் என்னை  என்ன சோதனை!  அங்கம் முழுவதும் -நீ  ஆடையால் மூடித்திரிய  காரணமான இந்த  அதீத குளிர்மீது அத்தனை கோபம் எனக்கு கொஞ்சம் கண்களும்  நீண்ட அழகு கை, கால் விரல்களும் மட்டும்  காணக் கிடைத்தது வரம்! மனதை உன்னோடு  கோர்த்துவிட்டு  நடந்து கொண்டிருந்தது  உடல்  யாரோடோ! உன் உதடு உதிர்த்த  ஓரிரு வார்த்தைகளை  திரும்பத் திரும்பக்  கோர்த்து கலைத்து  விளையாடிக் கொண்டிருக்கிறது  வினைசெய்யும் நெஞ்சம்  நின் ஓரக்கண் பார்வை  தந்த அழுத்தத்தில்  ...

முந்தைய நொடிவரை

Image
ஒளிரும் நீள் செவ்வக திரையில் வந்தமர்ந்து வாழ்ந்து செல்லும் கார்ட்டூன் கதாபாத்திரங்களோடு உயிராவதும் கைகளில் துடைப்பங்கொண்டு குப்பைகள் சிதறி சுத்தப்பாடம் சொல்வதும் வார்த்தைகளற்ற வரிகளில் இசை கோர்த்து சந்தம் சேர்த்து பாடலாக்கி பாடுவதும் நொடிகளில் விழிகள் உருட்டி ஆத்திரத்தையும் அன்பையும் பொழிவதும் உறங்க, உண்ண தாய்மடி வேண்டி கதைகள் கேட்டு கனவோடு துயில்வதுவும் வாஞ்சை பொங்கி வழியும் தருணங்களிலெல்லாம் இதயம் மலர ஈர முத்தம் தருவதுவும் வரிகளிலும், வார்த்தையிலும் அடங்காத அசைவுகள் ஆயிரம் உதிர்த்து ஆத்மா நிரப்புவதும் செய்கின்ற அவள் சிறுமியென்றே இத்தனை நாள் நினைத்திருந்தேன் அகல விரிந்து கிடந்த அங்காடி தன்னில் தாய் தொலைத்து தடுமாறி அழுத தன்வயதொத்த சிறுவனின் நினைவில் வெகுநாட்கள் கழித்து "பாவம்ல..அவன் அவங்க அம்மாகிட்ட போயிருப்பான்ல" என்று மனிதம் பொங்க கேட்டதற்கு முந்தைய நொடிவரை.

கவிதையாதல்

Image
தங்கக் கம்பியாய் நீண்டு வாழ்விடமெங்கும் வனப்பாய் நுழையும் காலைக்கதிரின்  லயிப்பில் பச்சைப் பசும்புல்லில் நீர் விசிற பரவும் மணத்தில் ஈச்சமர அடிநிழலில் கொஞ்சி சண்டையிட்டு கூடிக் களிக்கும் மைனாக்களின் ஈர்ப்பில் தடித்த உடல்மொழியோடு - நிலம் கடிக்க நடைபயிலும் குணவதிகளின் பார்ப்பில் பின் காட்டி முன் சிந்திக்கச் செய்யும் யுவதிகளின் கடப்பில் என எல்லாவற்றிலும் ஒளிந்திருந்தாலும் புதரடியில் அனாதையாய் இறந்துகிடக்கும் சிறுகுருவியின் துயரந்தான் நெஞ்சடைத்து கவிதையாகிறது.

அடர்த்தி!

Image
அதிகாலை வெண்புகையாய் சூழ்ந்துகிடக்கும்  இப்பனிக்குத்தான்  எவ்வளவு அடர்த்தி!  அதிரடியாய்  அதனோடு  போட்டியிட்டு சுடும்  சூரியனுக்குத்தான் எவ்வளவு அடர்த்தி!  குளிரோடும் கொஞ்சியும்  சூட்டோடு மிஞ்சியும்  போராடி மகிழும்  இந்த தேகத்திற்குத்தான்  எவ்வளவு அடர்த்தி!  இந்த மிதவேளையில்   ஆழ்மனதில்  அழுந்தக் கிடந்து  ஆட்டுவிக்கும் - உன்  அன்புதான்  எத்தனை வியப்புக்குரிய  அடர்த்தி!