கவிதையாதல்



தங்கக் கம்பியாய் நீண்டு
வாழ்விடமெங்கும்
வனப்பாய் நுழையும்
காலைக்கதிரின்  லயிப்பில்

பச்சைப் பசும்புல்லில்
நீர் விசிற
பரவும் மணத்தில்

ஈச்சமர அடிநிழலில்
கொஞ்சி சண்டையிட்டு
கூடிக் களிக்கும்
மைனாக்களின் ஈர்ப்பில்

தடித்த உடல்மொழியோடு - நிலம்
கடிக்க நடைபயிலும்
குணவதிகளின் பார்ப்பில்

பின் காட்டி
முன் சிந்திக்கச் செய்யும்
யுவதிகளின் கடப்பில்

என எல்லாவற்றிலும்
ஒளிந்திருந்தாலும்

புதரடியில்
அனாதையாய் இறந்துகிடக்கும்
சிறுகுருவியின் துயரந்தான்
நெஞ்சடைத்து
கவிதையாகிறது.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔