நமக்காக!
திரைமூடிய மாலை
இரவாகையில்
ஒளிர்கிறது அகம்
இருக்கட்டும்!
மெல்லிய நிலவொளியில்
அழகியாகும் நீ
பெரும் சூரியப்பகலில்
பேரழகியாய் தெரியாத விந்தை
யார் சொல்வாரோ!
கைகளெனப்படும் கரங்களின்
ஐவ்விரல்களைப் பற்றிக்கொண்டு
நிமிர்ந்து முகம் நோக்கையில்
முடிந்து தொடங்குகிற வாழ்வு
சூட்சமம் எனக்கு!
கவிதை பற்ற - நின் நீண்ட
கால்விரல்களையும்
அவ்வப்போது பற்றுதல்
என் சிந்தை நிர்பந்திக்கும்
சிறப்பு வழக்கமென
இப்போது சொல்கிறேன் உனக்கு!
நிலவு தேய
நினைவு காய
கடக்கப் போகிறது இரவு
அதற்கென்ன
நாளையும் வருமே
நமக்காக!
Comments
Post a Comment