போதுமடி எனக்கு!
கேள்விக்குறியாய் தொக்கி நிற்கும்
நீ பதிலளிக்கா
எல்லா குறுந்செய்திகளுக்கும் பின்
நான் கற்பனை கொள்கிற கணமும்
நீ கவனித்து கடக்கிற மனமும்
சுவடுகளை பதித்துக்கொண்டே வருகிறது!
எனக்கு நீயாயும்
உனக்கு நானாயும்
நாம் ஆகியிருப்பதில்
இக்குறுஞ்செய்திகளுக்கு
பெரும் பங்குண்டு!
காற்று புழுதி வாரி
வீசிக்கொண்டிருந்த
ஒரு பிற்பகல் பொழுதில்
அனுப்பிய ஒரு குறுஞ்செய்தியில்
நேசம் வாரித்தூற்ற
என்னுள் விதைந்தவள் நீ!
குறுஞ்செய்திகளால்
பிரியம் வளர்த்து
பிணைந்து கிடக்கும் மனங்கள்
வாய்த்தவர்கள் நாம்!
மகிழ்பவர்கள் நாம்!
வாழ்க்கை வரைமுறைகளில் பிளந்து
நேசங்களின் வரைமுறைகளற்ற
வெளியில் இணைந்து கிடக்கிறோம்
பிரியமான நாம்!
குறுந்செய்திகள் நம் இணைப்பான்கள்
நம்மை பிணைப்பான்கள்!
நீ நீயாயும்
நான் நானாயும் எங்கோ
மரித்து போகையில்
முன்னே உதிரும் கண்ணீரின் துளி
எனதாக சாபமும்
உனதாக வரமும்
வேண்டும் எனக்கு.
எங்கோ சாலைகளில்
வீதிகளில், விழாக்களில்
பாடல்களில், படங்களில்
ஏதோ, யாரோ
என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
நினைவில் கொண்டுவருகிற
நெஞ்சம் கணக்கும் இந்நேசம்
இப்பிறவியில் போதுமடி எனக்கு!
Comments
Post a Comment