உன்னாலே வாய்த்தவை
உயிர் உருக கரைந்தோடும்
இரவுகள் என்றும்
நீ தருபவை!
குறுகிய செல்பேசி
தன் குறுகிய திரைதனில்
காண்பிக்கும் முகம்தனில்
விரிந்து வியாபிக்கிறது
எனது வாழ்வு!
நானே பேசிக்கொண்டிருப்பதாய்
நீ சொல்லிக்கொண்டிருக்கிறாய்
யார் பேச வைப்பது
என நான் கேட்கையில்
வெளிப்படும் உன் குறுநகையில்
வியாபிக்கிறது நம் நாம்!
நாம் இருவரும் இரூடலில்
தனித்திருக்கும்
ஓர் ஆத்மா
என்கையில்
நீ அறிவிலீயாய் சிரிப்பதுவே
என் உள்ளுணர்வு
உன் நோக்கி ஈர்க்கப்பட
பெருங்காரணம் !
உறக்கம் கண்வழி வந்து
கால்களை நடுங்கச் செய்யும் பொழுதுகளிலும்
துயிலச் செல்லாது
என்னோடு உரையாடுகிற
நீ எப்படி நீயாவாய்
நீ நான்!
நான் நாம்!
இறுதியாய் உரையாடலில்
நான் பார்த்த முகம்
இன்னும் நியூரான்களில்
உரமேற்றிக்கொண்டே
உயிர் உருக
இரவு கரைத்த
உரையாடல்கள்
நானே பேசிக்கொண்டிருக்கவும்
நீயே கேட்டுக்கொண்டிருக்கவும்
நிகழ்ந்த தருணங்கள்
துயில் துரத்த
பிரியம் நிறைந்து
விழித்துக் கிடந்த
அந்த விழிகள்
இருடலாய் பிரிந்திருக்கும்
ஓர் ஆத்மா நாம்
என்றவொரு
புத்தப் புரிதல்
நிலைகுலையும்
நியூரான்களுக்கு
ஆத்ம சக்தியளிக்கும்
அந்த நினைவுகள்
உண்ண மறந்து
உணர்வுண்டு கழிகிற
இந்தக் கவிதை கணங்கள்
என
இந்த எல்லாமே
உன்னாலே வாய்த்தவை!
Comments
Post a Comment