இம்சை அரசி!
நீ
இரவுகளில்
இம்சிக்க தவறுவதேயில்லை
பெரும்பாலும்
பகல்களிலும் கூட!
நேற்று
முணுமுணுத்துக் கொண்டிருந்த
ஒரு பாடல் வழி
உள்நுழைந்து
என் இதயத்தை
என் இரவை
என் உறக்கத்தை
சிறு சிறு துண்டுகளாய்
பிரித்து பிரித்து
சேர்த்து சேர்த்து
விளையாடிக் கொண்டிருந்தாய்!
ஒரு காதல் சினிமாவில்
கதையின் நாயகியாய்
நீதான் தெரிந்தாய்
ஏதோ ஒரு முகத்துடன்
உன் முகத்தை
மூன்று மணிநேரம்
பொருத்தும்
அறிவியல் விந்தையை
இந்தக் காதல்
இந்த பிரியம்
எப்படி நிகழ்த்துகிறதென
குளிரும் இரவில்
ஆச்சர்யத்தில்
உறைந்திருந்தேன்!
ஒரு ரம்மியமான மாலை
மழை தூறும் வானம்
பின்னிருந்து நான் பார்க்கும் யாரோ ஒருத்தி
நெட்டி முறிக்கும் குட்டிப் பூனை
புன்னைகைக்கும் சிறுமி
மேனி தழுவும் சிறு காற்று
எங்கோ கேட்கும் ரம்மிய இசை
தலை சிலிர்ப்பும் நாய் குட்டி
காற்றில் உதிரும் பெரு இலை
கால்கள் தழுவும் சிறு அலையென
இப்படி
எல்லா ரூபத்திலேயும் வந்து
இம்சித்தால்
நான் என்னதான் செய்வேன்!
Comments
Post a Comment