மழை!
இப்பொழுதான்
மழைப் பெய்ந்து
ஓய்ந்திருக்கிறது
உன் கண்ணின்
கருவிழிகளாய்
இருட்டிக்கிடக்கிறது வானம்
ஈரத்தரையில்
சிறகு சிலிர்ப்பி
உலர்த்திக்கொள்ளும் குருவிகள்
காண்கின்ற வாழ்வு
எப்பொழுதும் சலிக்காத வரம்
துணிகள் உலர்த்தும்
கொடி கம்பிகளில்
மழைத்துளிகள் நடத்தும்
மாரத்தான் ஓட்டங்களை
கூர்ந்து கவனிப்பின்
ஞானம் நிச்சயம்
மின்னலும் ,இடியும்
ஒன்றிணைந்து வருகையில்
கண்களை மூடி
காதுகளைப் பொத்திக்கொண்டு
"அர்ச்சுனா, அர்ச்சுனா"
என சிறுவனாகையில்..
யார் அந்த அர்ச்சுனா
என இளைய மகள்
கேட்டக்கூடும் சுவாரஷ்யம்
இன்று உண்டு
நேற்று வாங்கி வந்து
இன்று துளிர் விட்டிருக்கும்
செம்பருத்திச் செடியின் இலையில்
சிரிக்கின்ற மழைத்துளியினை
பார்த்தேன்
பள்ளிவிட்டு வீடு திரும்பும்
மகளிடம் அதைச் சொல்லி
அவள் விழிகள் விரியும்
இரெண்டாம் அதிசயம்
காண வேண்டும்
வாடகை வீட்டின்
முதல்மாடி
சன்னல்களிலிருந்து
மழையை ரசிக்கவும்
ஒரு கொடுப்பினை
வேண்டும்
நீயும்
நானும்
அனிச்சையாய்
இன்று
உடல் நலிவுற்றிருக்கிறோம்
என்பது கூட
ஏதோ ஒருவகையில்
அற்பமாயினும்
மழைக்குப்பின்
மகிழ்வாயிருக்க காரணம்.
Comments
Post a Comment