தாத்தா உலகநாதன்



ஆறடிக்கும் கொஞ்சம் குறைவாக 
வளர்ந்து முடித்த அவர் 
எனக்கு ரெம்ப முன்பே பிறந்ததால்
தாத்தா முறை!  

செதுக்கிய கேசமும் 
செவ்வனே மழித்த முகமும்
பட்டை விரலும் 
கட்டை தேகமும்  
பரந்த பாதமும் 
பாரகான் செருப்பும்
அருபமாய் மனதில் வரும் 
அவரின் அடையாள இத்தியாதிகள்! 

ராணுவ உத்தியோகம் 
காவல்துறை கடமையென 
காடோடி வந்தவரின் 
கால்கள் நடந்தது - கடைசியில் 
கட்டையாய் சுருங்கிய 
கடைகோடி கிராமத்தில்! 

நேரத்துக்கு சாப்பாடு 
தாரத்துடன் சண்டை 
பேரத்துக்கு ஒப்பாமை 
பேரன்களோடு பேசுதல் 
ஒற்றை மிதிவண்டியில் 
ஊர் ஊராய் பயணம்  
என்பன சில அன்பரின் 
ஆகக்கடைசி பெருங்குணங்கள்!

விரல்கள் குவித்து
நச்சென்று தலையில்
அவர் கொட்டிய
அசுர குட்டுகளுக்கு
அன்று அழுது
இன்று எண்ணிச் சிரித்து
நியாபகத்தில்
பின்னோக்கி சுழல்தல்
அவர் அருளிய
நினைவுச் சுகம்!

டயனோரா டிவி 
லொடலொட பீரோ 
சில்லறை நிரம்பிய சில்வர் கப் 
கையிருக்கையற்ற கரகர 
பச்சை வண்ண இரும்பு நாற்காலி 
இவையெல்லாமும் ஆகலாம் 
எதிர்கால திரைப்படங்கள் 
என் இயக்கத்தில்! 

காக்கி முழுக்கால் ட்ரவுசரும்
கருப்பு கண்ணாடியும் அணிந்து 
எவரும் எதிர்வர 
இன்று பார்த்தாலும் 
எழும்பி நினைவில் வருகின்ற 
எங்கள் தாத்தா உலகநாதன்
இறந்தாரென்று
எவன் சொன்னது!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔