கொடுமை

கொடுமை :-

ஒவ்வொரு இரவின் 
மங்கிய வெளிச்சத்தில் 
சுவாசம் கவனிக்கிறோம் 
எப்போது நிற்க்குமென 

நித்தம் உறக்கத்தில் 
நீளும் குறட்டையொலியில் 
கடந்த வாழ்வு 
கடந்துபோகிறது
கடுமுயிரை அறுக்காது

ஒவ்வொருமுறை 
உணவருந்துகையிலும் 
"இப்பிடித் தின்னா 
என்னைக்கு போக" என 
எங்களுக்குள் இருக்கும் 
ஏளனச் சாத்தான் 
எப்போதும் மௌனமாய் 
கேள்விகள் எழுப்புகிறது

ஒதுக்கிய தட்டும் 
ஒன்றிய குவளையுமாய் 
வரலாற்றை ஒதுக்கி 
வாழ்வதாய் பிதற்றிக்கொள்ளும் 
வக்கிரக்கார வம்சாவழிகள் 
நாங்கள்

பெருவிரலொடித்து 
பெயர்ரேகைப் பிரட்டி 
வம்படியாய் 
வாங்கிகொல்வோம் 
எனச்சொல்லி  
அற்ப சொத்துக்காய் 
அலைகின்ற அற்பங்கள் நாங்கள்

தாய்ப்பால் புகட்டி 
தாலாட்டிய நேரத்தில் 
கள்ளிப்பால் புகட்டி 
கதைமுடித்திருக்கலாம் 
முதியோர் இல்லத்தில் விடப்போகிற  
இந்த நாளை நீ 
முன்னமே உணர்ந்திருந்தால்.

Comments