கழிகிறது காலம்
பரந்துகிடக்கும்
கடல்காற்றின் உப்பும்
பாலைவன வெப்பும்
உரசிக் களைத்த தேகத்தை
ஆட்க்கொள்கிறது
சாக்காடுபோல் ஓர் உறக்கம்
சட்டம் பூட்டிய
கண்ணாடிச் சன்னல்வழிச்
சாரைபோல் பாய்கிற வெளிச்சம்
துயில் கலைக்கையில்
தூங்கப் பணிக்கிறது
அசத்தும் நம் பழங்கதைகள்
மீறியெழுந்து
மெதுவாய் உட்கார்ந்து
கைப்பேசி உயிர்பித்து
கணநேரம் உத்துப்பார்க்கிறேன்
நீ சிரித்தவாறு
என்றோ இளமையில்
எடுத்த இனிய புகைப்படத்தை
கண்கள்மூடி
கனவுகளில் கொஞ்சம்
கண்டபடி உன்னோடு
சல்லாபித்து
சுனங்குகையில்
அடுத்தடுத்து வருகின்றன
அதிகார அழைப்புகள்
ஓடுகிறது கால்கள்
கழிகிறது காலம்.
Comments
Post a Comment