உச்சந்தலை வருடல்
ஆறுமாத காலமாய்
அடிவயிற்றுத் தேவை
அரித்துப் பணித்ததில்
கேட்டுக் கேட்டு
முதலில் சாம்பாரும்
பின்னர் புளிக்கொழம்பும்
தக்காளி ரசமும்
இறுதியாக
நேற்று செய்த
புளித்தண்ணி வாசமும்
நிரம்பத் தின்கிறேன்
சிறுத்த அவல்
போலிருக்கும் சோறினை
ருசியோடள்ளி
அருகிலிருந்து
ஆசையாய் சொல்லிக்கொடுத்து
அக்காவுக்கும்
அழுத்தமாய் நிர்பந்தித்து
அடியவளுக்கும்
இன்று மட்டும் வராது
ஏக மெனக்கிடலின்றி
எங்கோ தள்ளியிருக்கும்
எனக்கு மட்டும்
அதிக முயற்சியின்றி வருகிறது
அம்மாவின்
கை சமையல் ருசி
ஊட்டிய கைகள் கழுவாது
உச்சந்தலை
வருடியிருப்பாளென நினைக்கிறேன் .!
Comments
Post a Comment