அவன் :-



சற்று முன்புதான் 
பூவுலகிற்கு வந்தோம் என்கிற 
பிரஞ்கையின்றி 
கண்கள் இறுக்கி 
கருணையாய் 
உறங்குகிறான் அவன் 

நீண்டு வளர்ந்த 
நெடிய நகங்களால் கோடுகள் 
கீறிக் கொண்டு 
அன்னை முதலானவரை  
அழற வைக்கிறான் அவன் 

சின்னச்சிறிய உதடுகளில்
வழிந்து காய்ந்திருக்கும் 
தாய்ப்பாலின் மணத்தை விட 
தன்மையான வாசத்தை 
வீசுகிறான் அவன் 

சுருக்கங்கள் நிறைந்த 
சுந்தரஅழகுத்தோல் வழி
வாழ்வின் சூட்சமத்தை 
வாஞ்சையாய் பிரதிபலிக்கிறான் அவன் 

உயர்கின்ற அவனது 
உவகை குரலில் 
உறைந்து நனைகிறது 
பாலருந்திய நினைவுகள்  

சிறிய புருவமும் 
அகன்ற நாசியும் 
நிறைந்த சிகையும் 
பேரழகன் பிறந்து விட்டதனை 
பெயர்த்துச் சொல்கின்றன 

ஒவ்வொரு அவனும் 
ஓலமிட்டுப் பிறக்கையில் 
அந்திவானின் அறிய நட்சத்திரமொன்று
அங்கே மறைந்து 
இங்கே உதிப்பதை 
ஆழமாய் உணர்கிறேன். 

Comments

Post a Comment

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔