கவிதாயினி !

கவிதாயினி ! :-

எழுதத் தூண்டிவிட்டு 
ஏதும் தெரியாதது போல் 
கடக்கும் அந்த நிகழ்வு

காகிதம் விரித்தோ 
கணிப்பொறி திறந்தோ 
கற்பனை கோர்க்கையில் 
கத்துவாள் மகள் 
காரணமின்றி 

முதல்வரி தொடங்கி 
முற்றுப்பெறாமல் 
சத்தம் அமர்த்த 
சட்டென ஓடுகையில் 
காலடியில் விழுந்து 
கவிதைகள் உடையும் 

பொறிக்கையிலோ 
வதக்கையிலோ 
வந்து விழும் வரிகளை 
கருகல் பொருட்டு 
காவு கொடுப்பேன் 
காக்கச் செய்து 

அடுப்படைந்து 
இடுப்பொடிந்து 
போனாலும் 
கடுப்படைந்து 
காகிதம் விடுவதில்லை 
கனவையும் விடுவதில்லை 

எல்லாம் முடிந்து 
இமைகள் இறுக்குகையில்  
சட்டையின்றி விழுபவனையும் 
சட்டைசெய்யாது  
துளிர்க்கும் 
நான் எழுதவே முடியாத 
இன்பக் கவிதையொன்று.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔