மழைநாள் நியாபகம்

மழைநாள் நியாபகம் :-


சற்றேறக்குறைய
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு
இதே போன்றதொரு
மழை நாளில்
தெருவில் திரண்டு ஓடிய
கலங்கல் நீரில்
காகித கப்பல் விடுகையில்
அவளைப் பார்த்தேன்

நீல வண்ண
பள்ளிச் சீருடையில்
சிறு கடைக்கோ
பேருந்து நிறுத்தத்திற்கோ
அவள் விரைந்திருக்கக் கூடும்
அறியவில்லை இன்றுவரை நான்

அவளை பார்த்துக்கொண்டிருந்த
அந்த சில நொடிகளில்
எனது கப்பல்கள் சில
அடித்துச் செல்லப்பட்டிருந்தன
நான் கூடத்தான்

தொடக்கப் பள்ளிகளில்
சேர்ந்து படித்து
மேல்நிலையில் பிரிந்து
படித்தோம்
அவள் பாடத்தையும்
நான் அவளையும்  
உத்தேசமாக

வாய்ப்புகள் தவறியதில்
வாழ்க்கை சிதறியதில்
வயது குறைந்த அவளை
இல்லம் என்கிற
அவர்களது அறையில்
சந்தித்தேன்
கடந்த மழை நாளில் 

நான்
காதலித்ததோ
கவிதை எழுதுவதோ
அவளுக்கு எதுவும்
தெரியாது
எனக்கும்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔