Posts

Showing posts from 2014

நன்றிகள் 2014 ம் ஆண்டுக்கு :-

Image
                                    எனது  2014 - ஒரு பார்வை      இப்படியான ஆண்டின் இறுதி தினத்தில் சென்ற வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதே நினைவிலில்லை. இந்த 2014 ல் இப்படி உட்கார்ந்து திரும்பிப் பார்த்து யோசிப்பதையே கூட இந்த வருடத்தில் பெற்ற மிகப்பெரிய முதிர்ச்சியாக எண்ணுகிறேன். கவிதைகள் :-      எனது கவிதைகளுக்கு இது முக்கியமான வருடம். இன்மையில் எனது கவிதைகள் வெளியானது தொடர்ச்சியாக.  சில இலக்கிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களுடைய எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இந்த வருடத்தில்தான் வாய்த்தது. இலக்கின்றி கிறுக்கிக் கொண்டிருந்த என்னை கொஞ்சம் இலக்குகள் நோக்கி சிந்திக்க வைத்து எனது கவிதைகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்க்கொண்ட வருடம் 2014. அடுத்து பயணிக்க வேண்டிய  பயணங்கள் குறித்த தெளிந்த சிந்தனைகளையும் விதைத்த வருடம். திரு.அபிலாஷ் அவர்களுடனான சந்திப்பும், திரு .எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பும் இந்த வருடத்தில் மற...

குடிநீரில் மூத்திரம் பெய்து குடிக்கிற அவன் :-

Image
நேற்று சாலையோரத்தில் யதேர்ச்சையாகத்தான்  அவனைப் பார்த்தேன் வருகிறாயா வீட்டிற்கு என்று முடிப்பதற்கு முன்பே வாகனமேறி அமர்ந்துவிட்டான் மனிதம் கருதி மடத்தனமாக ஏதும் நடந்துகொள்ளவில்லை நான் வந்ததும் ஒரு குவளை தேநீரையும் ஒரு பிடி பலகாரத்தையும் தின்று ஏப்பம் விட்டுவிட்டு காப்பீடு ஏதும் தேறுமா என்று முயற்சித்தான் சோப்பு, சீப்பு என எதையாவது தலையில் கட்ட எத்தனித்தான்  தேறாது என்ற முடிவில் பழைய நண்பர்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களையும் பழி பழி என்று பழித்துவிட்டு அலுவலக அன்பர்களையும் காய்ச்சி காதுகளில்  ஈயம் ஊற்றினான் நான் எதை பேச எத்தனித்தாலும் தனக்கும் அந்த அனுபவம் தரமாகத்  தெரியுமெனவும் தொடர்ந்து பேச அனுமதியாமல் வயிற்று உப்புசம் வந்ததுபோல் வாந்தி வாந்தியாய் எடுத்து எண்ணங்களை நாராடித்தான் எனக்கு நிகழ்ந்த சில நல்ல நிகழ்வுகளை சொல்லுகையில் நன்றாக முகமிறுகினாலும்  முயற்சி செய்து மகிழ்வது போல் நடித்துப்பார்த்தான் எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் இருபது நிமிடம் முடிவாய் அறுத்து கழிப்பிடம் சென்று கழித்த நிம்மதியானவனைப்போல் ...

என்னால் சொல்ல முடிவதேயில்லை :-

Image
அழகு பெண்களைக் கண்டதும்  அனிச்சையாய் கண்கள்  திரும்புகிறது என்கிறேன்  எனக்கும் தான்   என்று நீ சொன்னதேயில்லை புகைத்தலில் ஒரு  புதுஇன்பம் இருப்பதை  சொல்லிச் சொல்லிச்  சிலாகித்தேன்  எனக்கும் தான்   என்று நீ சொன்னதேயில்லை மது அருந்துதல்  மனதைத் திறந்து  மாசகற்றுகிறது  என எப்போதும்  பிதற்றுகிறேன்   எனக்கும் தான்   என்று நீ சொன்னதேயில்லை விலைமகளிர் சகவாசம் விந்தினை வெளியேற்ற  மட்டுமில்லை என்கிறேன்    எனக்கும் தான்   என்று நீ சொன்னதேயில்லை அருகே உயர்பவனைப் பார்க்கையில்  உள்ளே காழ்ப்புணர்வதும் வெளியே நடிப்பதுமாகிய  செயல்கள்போல நிரம்பச் செய்து  நடிக்கின்ற  உன்னை நல்லவன் என  உலகம் சொல்வதாய்  சொல்கிறாய்  வெளிப்படையாய் இருக்கும்  என்னையுந்தான் என்று  என்னால் சொல்ல முடிவதேயில்லை.  

குறைந்தபட்ச மனிதனும், அதிகபட்ச ஞானியும் :-

Image
இரவு விளக்கின் வெளிச்சத்தில் நிழல் நிஜம்போல் நடக்க நான் கிடக்கிறேன் கீழே  நிழலாக சுவற்றுக் கெவிலியின் மொழியும் சுற்றும் நொடிமுள்ளின் ஒலியும் உரக்கக் கேட்கும் உன்னத தருணங்கள் அவை வீட்டு மனிதரெல்லாம் படுக்கையிலே பல்லிகள் போல் துயில்ந்திருக்க வீட்டுப் பல்லிகளெல்லாம் மனிதர்கள் போல் புழங்கும் இரவு அது நாம் நினைப்பது நமக்குள்ளே எதிரொலிக்கும் நமக்கொலிக்கும் நிசப்த நிமிடங்கள் இவை ஜன்னல்வழி சந்திரனோடு நீங்கள் சத்தமின்றி பேச வேண்டுமாயின் சகாயமான தருணம் எப்போதும் இதுதான் உலகம் அவிகையில் விழித்திருப்பது உள்ளுலகம் விழிப்போடு இருப்பதற்கான புறப்பாடு மின்பொருட்களை அணைத்துவிட்டு மிகையான இரவோடு மீண்டும் மீண்டும் விழிப்போடு தனித்திருப்பின் நீங்கள் குறைந்தபட்சம் மனிதனாகவும் அதிகபட்சம் ஞானியாகவும் ஆனாலும் ஆகலாம்!!

கனவுகள் தொலைத்த ஒருத்தி :-

Image
கரையா அலையா  கடப்பது எதுவென  கணநேரம் குழப்பும் தொலைவில்   கடற்கரையில் கண்கள்  சுற்றும் முற்றும் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்த பலூன்காரனையும்  கடலை விற்பவளையும்   நீளும் நாவலின்  சுவாரஷ்யத்தோடு   வாசித்துக் கொண்டிருந்தார்கள் வயோதிகர்கள் பலர்  எங்கிருந்தோ  ஓடிவந்த கொஞ்சம்  முதிர்ந்த குழந்தை காற்றின் போக்கில்   எங்கேயோ ஓடிக்கொண்டிருந்த  பட்டத்தை துரத்திக் கொண்டிருந்தது   காற்றில் ஆடும்  அலையின் ஓசையைவிட  ஆனந்தமாய் இசைத்தது  பஞ்சுமிட்டாய்க்காரனின் பக்குவமான மணியோசை  உலராத நிறத்தில்  உதட்டு சாயமிட்டு - நெஞ்சம்  உலுக்குமாறு புடவைக்கட்டி உறுத்தும் மல்லிப்பூ வாசனையிழுக்க உண்ணவரும் அவன்களுக்கு  உடலை பந்திவைக்க  உறுதியோடு காத்திருக்கிறாள் கனவுகள் தொலைத்த கண்களோடு   கடற்கரை கண்ணகிசிலைக்குப் பின்னால்  தினமும் அந்த ஒருத்தி. 

அந்தச் சுடிதார் :-

Image
மூன்றொரு மாதங்களாய் மூச்சுமுட்ட யோசித்த பிறகு முடிவெடுத்தோம் எப்படியும் வாங்கிவிடுவதென தி,நகரிலும், மைலாப்பூரிலும் சல்லிசாகக் கிடைப்பதாக சந்தடி சாக்கில் பேசும்போது சக நண்பர்கள் எனக்கும் அவளுக்கும் சொன்னார்கள் நான்கு, வாரஇறுதி நாட்கள் இணையத்திலும் இங்கும் அங்குமாய் பல கடைகளிலும் ஏறி இறங்கி தள்ளுபடி, தரமென  ஏகப்பட்ட  விசயங்களை விசாரித்தோம் முடிவில் கடையையும் கவ்வும் நாளையும் காசையும் தீர்மானித்து வாங்கியும் வந்து வாஞ்சை போக பயன்படுத்தியும் ஆயிற்று மூன்று மாதங்கள் கழித்து முச்சந்தியில் காற்றில் பறந்த கைப்பிடித்துணியாய் கந்தலாக அந்தச் சுடிதாரைப் பார்க்கையில் மனம் என்னவோ செய்கிறது. 

இது எங்கள் குழந்தைகளின் பூமி :-

Image
வன்முறைக் கத்தியெடுத்து வாஞ்சையாய் நெஞ்சில் சொருகிப் பார்க்கிறான் கத்தி கச்சிதமாய் உள்ளிறங்கி ஒவ்வொரு செல்லாய், சதையாய் கிழிக்கையில் பீறிட்டு கிளம்புகிறது சாத்தான்களின் சதசதக்கும் இரத்தம் சாதித்த சத்தம்  எங்கிருந்தோ ஒரு தேவ தூதன் ஓடிவருகிறான் குழந்தையாக சிறுவன்போல நுழைந்த கத்தியினை நொடிப்பொழுதில் பக்குவமாய் வெளியெடுத்து பலமருந்துகள் தடவி காயமாற்ற எத்தனிக்கிறான் சாத்தானுக்கும் வேதம் ஓதும் சலனமின்றி வலி காண்பிக்காது வயதை கவனிக்காது அவன் வெளியெடுத்த கத்தியை அன்பின் வாசமின்றி அவன் நெஞ்சிலே சொருகி கொப்பளிக்கும் குருதியிலே களிப்புறும் தீவிரவாத சாத்தானை களையெடுப்பது எப்படி? இரங்கல்களும், ஆறுதல்களும் உதவிகளும் எப்படி திரும்பச் சேர்க்கும் தொலைந்த கனவுகளை?? துரத்தும் நினைவுகளை?? உயிர்வாதை தெரியாத ராணுவமும் - பதில் உயிர்பலி கேட்கும் தீவிரவாதமும் எங்கேனும் ஒழிந்து போங்கள் இது எங்கள் குழந்தைகளின் பூமி -அவர்கள் எங்களோடு வாழும் சாமி.

அன்றைய கன்னி :-

Image
ஜன்னல் வழி சுட்டெரித்த சூரியனை புறந்தள்ளி இருவரும் தனித்தனியே எழுந்து தொடர்ந்த யாருமற்ற சாலையில் தொடங்கிய பயணத்தில் யாருமற்ற அறையில் தொடர்ந்த பயணத்தில் நீ நானாகவும் நான் நீயாகவும் மாறித் தொலைகையில் சூரியன் நாணி சுவடற்றுப் போயிருந்தான் எண்ணம் தெளிந்து எழுந்து நகலுகையில் ஆதிமனிதனை ஒத்திருந்தோம் ஆப்பிளைக் கடித்த ஆதாமும் ஏவாளுமாய் நின் நிர்வாணத்தை பின்னிருந்து ஒளிர்ந்த பேரிருள் அழகாக்க மீண்டும் தொலைந்தேன் மீளாது உனக்குள் குற்றவுணர்வு குடைந்திருக்கும் கனவு அதன் பின் கண்ணில் வருவதேயில்லை - அன்றைய கன்னியைப்போலவே.

உங்களுக்கேன் வழிக்கொரு இறை.??

Image
எங்கு தோன்றியது எனத்தெரியாமல் எழுதும் எழுத்துபோல் ஆரம்பிக்கிறது அவளின் பிரசவ வலி அடிவயிற்றில் அப்பிப் பிடித்து வலி வாதை வதைக்கையில் உலகம் மட்டும் ஏனோ இயல்போடே இருக்கிறது மரண வாசலின் சுவர்களை போலிருக்கின்றன மல்லாக்கப் படுத்துக் கொண்டு மருத்துவமனையில் பிரசவஅறை நோக்கி பயணிக்கிற பாதைகள் அங்குமிங்கும் அமுக்கி பிஞ்சுக்குழந்தை பிதுக்கி பிறப்பிக்கும் வலி பேரண்டம் உடைகிற பெருவலி போனாலும் போகலாம் உயிர்வளி உதடுகள் வழி  அந்தரங்க உறுப்புவழி அவர்கள் அறிவியல் தந்திரங்கள் செய்கையில் தோன்றுமெண்ணம் தொடுக்க தொன்மையிலுமில்லை தோதுவான மொழி கல்யாணம் கசக்கிறது கலவி கசக்கிறது கல்லறை வலி கவ்வும் நரகமாய் கால்களுக்கிடையில் இருக்கையில் இறந்துதான் பிறக்கிறோம் இருந்தும் பிரசவிக்கிறோம் எனில் நாங்கள் இறையன்றி வணங்குவதற்கு உங்களுக்கேன் வழிக்கொரு இறை.??

பாதங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன் :-

Image
தினமும் வீட்டிலும் வீட்டின் அருகாமையிலும் மொட்டைமாடிகளிலும் வாசல் வாராண்டாக்களிலும் சலிக்காமல் அழைந்து விளையாடி வருகின்றன இந்த அத்துணை இடங்களும் என்போலன்றி அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் மென்மிதிப் படுகையில் மெல்லென சாபவிமோசனங்கள் பெறுவதால் அலைகின்ற பாதங்களை அழகாய் படம்பிடிக்க அதனோடு அலைகையில் சிற்றெரும்பொன்று சிரித்தவாரே மயங்கி கிடந்தது அதனழகில் அதனடியில்!! சின்னஞ்சிறுவயதில் எனது கன்னங்களிலும் நெஞ்சத்திலும் ஏறி மிதித்தது - நான் இன்றும் இளமையாயிருக்க காரணமாயிருக்குமோ என்னவோ!! இன்றும் இரவுகளில் இழி கனவுகள் பிடிக்காதிருக்க தலையை அதனருகே வைத்து தன்மையாய் தடவியாவரேதான் உறங்குகிறேன் நான் அவளின் இந்தச் சின்னஞ்சிறிய பாதங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

இதற்குத்தானே இது எல்லாமும் :-

Image
         மாலையும் இரவும் மயங்கிப் பிணங்கும் பொழுது, அவனும் அவள்களும் மருத்துவமனையிலிருந்து அவர்களாகக் கிளம்பினார்கள் அம்மாவாகியிருக்கும் அவளது தமக்கையைப் பார்த்துவிட்டு. பிஞ்சு உயரின் பிசிரற்ற அழகினைப் பற்றி சிலாகித்து பேசியவாறே இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில் காற்றும் அவர்களோடு கதைகேட்டவாரே வந்து கொண்டிருந்தது. போரூர் முக்கிய சந்திப்புக்கு சற்று முன்பாக அவர்கள் வருகையில் அது அவனின் கண்களில் பட்டது, கற்பனையை விரித்தது. அவன், அவளிடம் அங்கே அது கிடப்பதாகச் சொல்லி வண்டியினை ஓரமாக நிறுத்தி எடுத்துவரப் பணித்தான். அவளும் அவனைப் போலவே கற்பனை எகிற ஓடிச்சென்று எடுத்து வருகையில் கூடவே பயணித்த காற்றுக்கும் பதட்டம் நிலவியது, என்னவாக இருக்கும் அதுவென.     கையில் அது இருக்க மறுபடியும் தொடங்கியது காற்று கூடவரும் பயணம். மின்விளக்குகளும், இதர வாகனங்களின் ஒலிகளும் என்னதான் கண்கள் கலைத்தாலும் அது மட்டுமே சிந்தை முழுதும் நிரம்ப ஆக்கிரமித்திருந்தது. அப்படியென்னவாயிருக்குமது? என்ன இருக்கும் அதற்குள்? ஏக கற்பனை நிரம்பி வழிய, அவள் அவ்வளவு முயன்றும் திறக்கவில்லை அது...

ஏன் இத்தனை புலம்பல்கள் ??

Image
           நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அலுவலகம், நிறைய நண்பர்கள் யாருடன் என்ன பேசினாலும் முடிவில் பணம் சார்ந்த, அலுவலக பதவிகள் சார்ந்த பேச்சுகள் வந்து விழுகின்றன. நிறைய புலம்பல்களையும், வெறுப்பையும் தாண்டி பேச இந்த பெரும்பான்மை மனிதர்களுக்கு ஒன்றுமே இல்லையா என எரிச்சலுருவதாகவும் சொல்லி அலுத்துக்கொண்டார்.      உண்மைதான், நகர சூழ்நிலையில் யாராவது ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் நேரங்காலந் தெரியாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலனவர்களின் சராசரி அலுவல் நேரம் அதிகரித்திருகிறது. சராசரி உறக்க நேரம் குறைந்திருக்கிறது, நாம் விரும்பாவிட்டாலும் வீட்டிலும், வெளியிலும் யாரோ ஒருவர் அலுவலக அரசியலையும், பணம் சார்ந்த கதைகளையும் பேசுவதைக் கேட்க வேண்டியதாயிருக்கிறது. அதுதாண்டி நிறைய விஷயங்களைப் பற்றிய சிந்தனையோ, புரிதலோ இல்லாமல் "life is a race" என்று ஒரு பெருங்கூட்டம் ஓடுகையில் இடையில் இடிபடுகின்ற மன நிலையில் சிலர் இருக்கிறோம். முறையற்ற, உறக்கமற்ற உடல், மனது நமது சிந்தனையின் போக்கை மாற்றி நம்மை எரிச்சலடையச் செய்கிறது. அதனால் உர...

மழைநாள் நினைவுகள் :-

Image
இத்தகைய பிற்பகல் மழை நாளில்தான் நீ என்னோடு  மௌனித்துக் கொண்டாய் உன் பேச்சினை நினைவுபடுத்துவது போல்   விட்டு விட்டு   தூறிக் கொண்டிருக்கிறது இந்த சாரல் மழை    ஈரம் படிந்த காலையில் எழுந்த சூரியனைப்  பார்த்தேன்  நீ குனிகின்ற  நியாபகம் வந்தது  என் படுக்கையறை  சன்னலுக்கு வெளியே  மழைச் சத்தம்  கேட்கையிலெல்லாம் உறக்கத்திலும் உதிக்கிறது உன் சார்ந்த கனவு  உன்னுடனான காதலை  முதலில் உணர்ந்த பொழுது  அநேகமாக மழைநாளாய்  இருந்திருக்க வேண்டும்.  

வாடகை வீடு :-

Image
தான் அதிக நேரம்  அமர்ந்திருக்கும்  மொட்டைமாடியில் போய் நின்று சில நொடிகள்  மௌனித்து விட்டு  வருகிறார் அப்பா  கலைந்துபோய்  காலியாகிக் கிடக்கும்  சமையலறையிலும்  படுக்கையறையிலும்  பல நிமிடங்கள்  நின்று உதிர்க்கிறாள்  சில கண்ணீர் துளிகளை அம்மா கதவினையும்  தான் எப்போதும்  பிடித்து நடக்கும்  ஜன்னல் கம்பிகளையும்  தடவி கணக்கிறாள்  தள்ளாத பூட்டி ஆச்சி தினம் காலையில் அரிசிக்கு காத்திருக்கும் சேவலுக்கும் சோற்றுக் காத்திருக்கும் காகத்துக்கும், அணிலுக்கும் யார் சொல்லுவார்கள் என்ற வருத்தத்தில் ஆச்சி அழுகைக்கு முந்தைய  மூஞ்சிகளைத் தாங்கி  அண்டை அயலார்  என எல்லோரும்  விக்கித்து நிற்க "ஐ ஜாலி  நாங்க புது வீட்டுக்கு போறோமே"  என மகிழும் சிறு மகளை  என்ன சொல்லுவதன்று  தெரியாமல்  மழங்க மழங்க  விழித்து விம்முகிறது   பிரிவுத் துயரில்  வாடிக் கிடக்கும்  வாடகை வீ...

அதே நாள் :-

Image
வாழ்வியல் கேள்விகளுக்கு வழிகிடைத்து வருகையில் வாழ்க்கையின் பயணத்தினை வந்துணர்த்திய அதே நாள். இரு பெரும் பேரூந்துகளில் இடையரப் பயணித்து இறங்கி கடந்து இன்முகம் காணக் காத்திருந்து இதயம் வெடிக்க இனிதே கண்ட அதே நாள் வெப்பம் மிதக்கும் சாலைகள் போல் கொதித்துக் கிடந்த கொல்மனத்தை அடக்க முயன்று அடிமையாகி அடைபடக் காத்திருந்த அதே நாள் காத்திருப்பும் காண்கின்ற பிடிப்பும் எத்துணை வலியது என உணரவைத்த அதே நாள் கைகள் குலுக்கி கண்கள் சறுக்கி காதல் கடத்திய அதே நாள் உண்ட கூழ்போல் உருகி வழிந்து உணவு மறந்து நினைவுகள் செறிக்க நீண்ட தூரம் பயணித்த அதே நாள் ஆண்டுகள் கடந்தும் ஆழத்தில் உணர்ந்தும் அனைநலம் கருதி அன்பில் மட்டும் உணர்த்தும் ஆத்மாவைச் சந்தித்த - இன்று அதே நாள். 

இனிய தோழி!! :-

Image

அவன் :-

Image
சற்று முன்புதான்  பூவுலகிற்கு வந்தோம் என்கிற  பிரஞ்கையின்றி  கண்கள் இறுக்கி  கருணையாய்  உறங்குகிறான் அவன்  நீண்டு வளர்ந்த  நெடிய நகங்களால் கோடுகள்  கீறிக் கொண்டு  அன்னை முதலானவரை   அழற வைக்கிறான் அவன்  சின்னச்சிறிய உதடுகளில் வழிந்து காய்ந்திருக்கும்  தாய்ப்பாலின் மணத்தை விட  தன்மையான வாசத்தை  வீசுகிறான் அவன்  சுருக்கங்கள் நிறைந்த  சுந்தரஅழகுத்தோல் வழி வாழ்வின் சூட்சமத்தை  வாஞ்சையாய் பிரதிபலிக்கிறான் அவன்  உயர்கின்ற அவனது  உவகை குரலில்  உறைந்து நனைகிறது  பாலருந்திய நினைவுகள்   சிறிய புருவமும்  அகன்ற நாசியும்  நிறைந்த சிகையும்  பேரழகன் பிறந்து விட்டதனை  பெயர்த்துச் சொல்கின்றன  ஒவ்வொரு அவனும்  ஓலமிட்டுப் பிறக்கையில்  அந்திவானின் அறிய நட்சத்திரமொன்று அங்கே மறைந்து  இங்கே உதிப்பதை  ஆழமாய் உணர்கிறேன். 

அடுத்த ஞாயிறு :-

Image
அடுத்த ஞாயிறு இந்த ஞாயிறு போல் இருக்கப் போவதில்லை நான்குச் சுவர்களுக்குள் நான் மட்டும் தனியே விழிக்கிற நிகழ்வு விபரீதம் போல நிகழும் கடன்களை கழிக்கையில் காற்றில் சுழல்வது போல் நினைவுகளில் சுழல்கிற மனது வாய்க்கும் உண்ணுமுணவு உணவுக் குழலுக்குள் இறங்குகிற உணர்வை உணரும் நிசப்தம் நிகழும் கைபேசியே கதியெனக் காத்துக் கிடக்கும் கனத்துக் கிடக்கும் கணங்கள் கடக்கும் இரவுகளில் உடல் உறங்கி மனம் விழிக்கும் மகிழ்வற்ற கனவுகள் தோன்றும் பிழைக்கத் தனியே போகப் போகும் அந்நியதேசத்தில் பிறக்கும் அடுத்த ஞாயிறு இங்கிருக்கும் இந்த ஞாயிறு போல் இம்மியளவும் இருக்கப் போவதில்லை. 

இறங்காத அவள் :-

Image
சன்னமான பேரூந்து நிலைய   இரைச்சலோடுதான்  அவள் அழைப்புவருகிறது  பெரும்பாலும்  இந்நாட்களில்  பேரூந்து நிலைய இரைச்சல் இசையின் வடிவமே  என இப்பொழுது  உணர ஆரம்பித்திருக்கிறேன்  நீங்களும் உணரலாம்  ஆனால் அவள்குரலின்  பின்னணியில் அது  கேட்க வேண்டும் அவள் அமரும் இருக்கையும்  நிற்கையில் பிடிக்கும்  பிடிக்கம்பியும்  நான் கனவிலும் பழிக்கும்  காரியப் பொருட்களாகின்றன  நடத்துனரின் பெருங்குரலும் சக பயணியரின் நகையொலியும்  சங்கீதமாயொலிக்கின்றன  அவள் பேச்சுக்கு  அவை பின்னணி இசையாவதால்   பேரூந்து ஏறிப்  பேசத் தொடங்கியதும்  இங்கேயும் ஏறி  அமர்கிறாள்  நிறுத்தம் வந்தததும்  பேரூந்திலிருந்து இறங்கிச் செல்லும் அவள்   இங்கிருந்து மட்டும்  இறங்குவதேயில்லை! 

வாசிக்கும் பழக்கம் மரபியல் தொடர்பானதா?

Image
           நான் ஒரு நான்காவது படித்துக்கொண்டிருக்கையில் என நினைக்கிறேன். எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டருகே முருகண்ணன் சலூன் கடை வைத்திருந்தார். ஒல்லியாக கூன் விழுந்த தேகக்காரர். எனது தந்தையார் அடிக்கடி தலைமுடிதனை வெட்டுவதற்காக எனது தம்பிகள் இருவரையும், என்னையும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே கொண்டு உட்கார வைத்து விடுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழியும். காத்திருந்து முடி வெட்டிவிட்டு வருவோம். மூன்றுபேருக்கும் ஒரேமாதிரிதான் வெட்டுவார்.( அனேகமாக ஊருக்கே ஒரே மாதிரித்தான் வெட்டுவார் என நினைக்கிறேன்!!) நாங்கள் மூவரும் சண்டையிட்டுக் கொள்வோம் ஒரே மாதிரி வெட்டியதற்காக. ( நீங்கதான் அண்ணன் தம்பிங்கன்னு தெரிய வேண்டாமா அதான் அப்பிடி வெட்டிருப்பான் இது எங்க அம்மா வாதம். செம! தீபாவளிக்கு மட்டுந்தான் புதுத்துணி எடுத்துத் தருவார்கள் வீட்டில், ஒரே மாதிரி, நீளமா சட்டைக்கும், டிரவுசருக்கும் துணி எடுத்து ஒரே மாதிரி சட்டையும், டிரவுசரும்  தைத்து தருவார்கள். வானத்தைப் போல விஜயகாந்த் சகோதரர்கள் மாதிரி. அதற்கும் ஒரு பெரிய சண்டை நடக்கும் அத...

அவனும் அவளும் :-

Image
அவன் அவளுக்கு விசித்திர புனைப்பெயர் வைத்து எப்போதும் கூறிக் கொண்டிருப்பான் அவன் அவளோடு எப்பொழுதும் பேச விழைந்து அழைத்துக் கொண்டிருப்பான் அவன் அவளோடு எப்பொழுதும் கனவுகளில் வாழ்வதாய் கற்பனையில் உறங்கிக் கொண்டிருப்பான் அவன் அவளோடு உன்னை சந்திக்கட்டுமா என்று சண்டையிட்ட வண்ணமிருப்பான்  அவன் அவளோடு தவறுகளையும், புரிதல்களையும் விவாதித்த வீம்பிலிருப்பான் அவன் அவளோடு அவளுக்கு தெரிந்தே அவளில்லாது காதலித்துக் கொண்டேயிருப்பான் அவள் அவனை உள்ளம் நிரம்ப உலகிற்க்குத் தெரியாது உண்மையாக விரும்பிக் கடந்தவண்ணமே இருப்பாளென்ற ஏகாந்தத்தில் எப்பொழுதுமிருப்பான்.  

தலைப்பின்றி!

Image
உச்சி வெயிலினை  ஓரங்கட்டி  மேலாடைத் தாண்டி  தழுவுது குளிர்  மொட்டைமாடியில்  படர்ந்திருக்கும் ஈரம்  மழை வந்து  தரை நனைத்து  தடம் விட்டுச் சென்றதை  சொல்கையில்   தூரத்தில்  காக்கையோ, புறாவோ  எனத் தெரியாத  பனிப்புகையில் இரைதேடும்  பிரஞ்கையற்று    இருபறவைகள் கூடிக்கிடந்தன   தலைவிழுந்த  மழை சிலுப்பி  மண்சாலைக் கடந்த அவள்  என்றோ என்சாலைக் கடந்த  என்னவளாகத் தெரிகையில்  இடி இடித்தது எனக்கோ, மழைக்கோ   என்றவாறு.  

காவியத்தலைவன் ( 2014 ) - எனது பார்வை :-

Image
         எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குனர் வசந்தபாலனும் பழைய தமிழ் நாடகப் பள்ளிகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது ஜெயமோகன் பரிந்துரைத்த "எனது நாடக வாழ்க்கை" என்ற மறைந்த அவ்வை சண்முகம் அவர்களின் சுயசரிதத்தைப் வசந்தபாலன் படித்து அந்த நூலின் உதவியோடு இருவரும் இணைந்து எழுதிய கதை இந்த காவியத்தலைவன் படக்கதை. சங்கராபரணம், சலங்கை ஒலி போன்ற பழைய இசை நாடகங்களை முன்மாதிரியாகவும் கொண்டு இயக்குனர் இந்த கதைக்களத்தினை அமைத்துள்ளார்.      கதைக்களம், 20ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து தொடங்கி சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் நிறைவுறுகிறது. தவத்திரு சிவதாஸ் சுவாமிகள் ( நாசர் ) ஸ்ரீ பால சண்முகானாந்தா என்ற நாடகக் குழுவினை நடத்திவருகிறார். இளவயதில் நாடகக் குழுவில் சேர்த்து விடப்படும் கோமதிநாயகம் ( பிரிதிவிராஜ்), பிறகு அவர் கண்டு சேர்க்கும் ஆதரவற்றச் சிறுவன் காளி (சித்தார்த்), இருவரும் முன்னணி வேஷங்கள் கட்ட நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அந்தக் குழுவில் தாயுடன் வந்து சேரும் வடிவு (வேதிகா),  இளவரசி (அனய்கா), கொடுவாய் (தம...

மரணத்தின் வலி எத்தகையது?

Image
             ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப்ஸ் பந்து தாக்கி விபத்தில் உயரிழந்தமை குறித்து செய்திகள் தொடர்ந்து  வந்த வண்ணமிருக்கின்றன. எகிறி எனப்படும் பவுன்சர் பந்துவீச்சில் படுகாயமுற்று, கோமா நிலைக்கு சென்று மரணித்திருக்கிறார் இருபத்து ஐந்து வயதேயான பிலிப்ஸ். கிரிக்கெட் உலகமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.    மரணம் குறித்த எனது நினைவுகளை கிளருகிறது இந்த இளம்வீரரின் மரணம். இருபத்து ஐந்து வயதில் மரணம். ஏற்றுக்கொள்ள முடிகின்ற ஒன்றா இது. ஜீரணிக்க இயலுமா இதை. எதிர்பார்த்திருப்பார்களா அவரது குடும்பத்தினர் இதை. அவ்வளவு எளிதில் கடக்கின்ற நிகழ்வா இது. மரணிக்கின்ற நிகழ்வை விட, அதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டு பயணிக்கிற நெருங்கிய உறவுகளின் மனநிலை கொடுமையானது. எத்தகைய எதிரிக்கும் நிகழக்கூடாத அந்த நிகழ்வு, சோகம் பிலிப்ஸ் குடும்பத்தாருக்கு நிகழ்ந்திருக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவர் உறவுகளுக்கு தேவையான மன தைரியத்தை அவர்களது இறைவன் அவர்களுக்கு கொடுக்கட்டும்.      எனக்கு விவரம் தெர...

அந்த ஒற்றைமுடி :-

Image
கண்ணில் விழுந்த அந்த ஒற்றைசிறு முடிதனை வெகு நேரமாய் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எங்கிருந்து வந்து என் கண்ணில் விழுந்திருக்கும் அது காபாலத்தின் மீதிருந்தா கண்ணின் மேலிமையிலிருந்தா உடலெங்கும் முளைத்திருக்கும் பூனைமுடிகளில் ஏதோவொன்றாயிருக்குமா அக்குளின் வியர்வையால் அலங்கரிக்கப்பட்ட முடியாயிருக்குமா இல்லை அந்தரங்கப் பகுதியிலிருந்து அரிப்பின்வினை உதிர்ந்து அயர்ந்த விழி வந்தடைந்திருக்குமா எங்கிருந்து வந்து என் கண்ணில் விழுந்திருக்கும் அது இல்லை அது எனது முடியே இல்லையா மகளின், மனைவியின் தாயின், தந்தையின் தமையனின் முடியாயிருக்குமா இல்லை என் ரத்தம் சாராத எவரோ ஒருவரின் எந்தபாக முடியாகவும் இருக்குமோ எதற்கு எனக்குள் இத்தனை சிந்தனை விழுந்த முடியை விசையுடன் ஊதித்தள்ளி விட்டு வேறுவேலை பார்ப்பதற்கு பதில்.   

கடைசிவரை.!!

Image
அருந்தி வைத்த தேநீர் கோப்பை உண்டு வைத்த சில்வர் தட்டு போலத்தான் உன் நினைவும் காய்ந்துகொண்டு கடக்க மறுக்கிறது பலமுறை அழைத்த அழைப்பை சிலமுறை பார்த்த பொழுதும் எப்போதாவது பேசுகின்ற நீ எதைப்பற்றியும் பேசுவதில்லை வந்தக் கடுப்பை வார்த்தைகளாய் கோர்க்க விழைகையில் யார் யாரோ அர்த்தமின்றி அழைத்து அழிக்கிறார்கள் சிந்தனையை உன்னை பேசவைப்பதுவும் தொலைந்த வரிகளை மீட்டெடுப்பதுவுமாகிய செயல்களை செய்கின்ற நான் காதலனாகவும் போவதில்லை கவிஞனாகவும் போவதில்லை கடைசிவரை.!!

செப்புச் சமையல்

Image
நெகிழிக் குடுவையில் காரட் பொறியல் வைக்கத் தெரியுமா உங்களுக்கு? தட்டில் சோறும் சிறு டம்ளரில் குழம்பும் வைக்கத் தெரியுமா? ஐந்தாறு நொடிகளில் தேநீரும், குளம்பியும் ஆத்தித் தரத் தெரியாது ஆளுயர உங்களுக்கு எதிர்பாராது எப்போதாவது ருசியாக சமைத்து வயிறு நிரம்பச் செய்யும் வக்கனை சமையல்தான் ஆகப் பெரிதாகத் தெரியும் உங்களுக்கு நாவில் சுவைக்காது வயிறு நிரம்பாது செப்புச் சாமான்களில் மனம் நிறைய சமைத்து தினம் நிறைய உண்பிக்க மழலை அவளுக்கு மட்டுந்தான் இம்மண்ணுலகில். என்றும் தெரியும்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடன் சில நிமிடங்கள்

Image
     நேற்று சென்னை, கே.கே. நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் - ல் நடைபெற்ற "படி" விருதுகள் வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன் எனது மனைவியுடன். எழுத்தாளர் எஸ்.ரா  தலைமையுரையினை கேட்கவேண்டி சென்றிருந்தோம்.      எஸ்.ரா. பற்றி நான் சொல்லுவதற்கு எதுவுமில்லை. இருந்தபோதிலும், தமிழ் இலக்கிய உலகினை பற்றி அவ்வளவாகத் தெரியாத, வாசிப்பதை மறந்து போய், துறந்து போய், கணிப்பொறிகளுக்குள்ளும், தொலைக்காட்சிகளுக்குள்ளும் முற்றுலுமாக மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் எனது சில, பல நண்பர்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில் அவரை பற்றி சில வார்த்தைகள். எஸ்.ரா அவரது எழுத்துக்களை ஆனந்த விகடன் மூலமாகத்தான் முதலில் படிக்க நேர்ந்தது. அவரது எழுத்துகளின் மீது பெருங்காதல் கொண்டு அவரது தேசாந்திரி, சிறிது வெளிச்சம் போன்ற விகடன் பிரசுர புத்தகங்களை படித்து அவரின் ரசிகனானேன். அவர் விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர் என்பதுவும், கோவில்பட்டியில்தான் அவரது அம்மா தாத்தா வீடு என்பதும் தெரிந்தபொழுது இன்னும் அருகில் இணக்கமாகத் தெரிந்தார்.  எஸ...

ஒரு காதல் கடிதம்

Image
ஒரு காதல் கடிதம் :-         வாகனங்கள் காற்றை கிழித்துக் கொண்டு கிழக்கும் மேற்கும் பயணிக்கின்ற  சாலையில் ஒரு மாலைப்பொழுதில் உன்னை முதலில் பார்த்த நியாபகம் நேற்று நடந்தது போல் இன்றும் நினைவிலிருக்கிறது. அன்று கதகதத்த மாலைசூரியனைப் போல் உன் கண்கள் என் நோக்கி பலபலத்ததையும், வீசிய காற்றில் கலைந்த உனது சிகைபோல் எனக்குள் ஏதோ ஒழுங்காயிருந்தது கலைந்தமையையும் இன்று உணருகையில் புலப்படுகிறது . ஹார்மோன்களின் கலகத்தால் ஏற்படும் உடற்செயலியல் வினைதான் இதுவெனினும்,  உன்னை முதலில் பார்த்த நொடியில் எனக்குள் இத்தகைய வினைகள், விபரீதங்கள் ஏற்பட எந்த அறிவியல், சுரப்புகளின் விதி காரணம் என்பது பலமுறை பலதேடல்களிலும் எனக்கும், இன்றுவரை அறிவியலுக்கும் புலப்படவில்லை. அது ஏதோ ஈர்ப்பு என்ற நினைப்பு கூட எனக்கில்லை அந்தநாள்தனின் அந்திமப் பொழுதுகளில். இருள் சூழத்தொடங்கிய அந்த கருக்கள் பொழுதில் வெவ்வேறு திசைகளில் இருவரும் அவரவர்  இலக்கு நோக்கி பயணப்பட்டோம், நீ எனக்குள் ஒரு பிரயாணத்தை, ஒரு மாயைப் பயணத்தை தொடங்கியிருப்பது அறியாது நான் உறங்கியவாரே சென்றுகொண்டிரு...

வேர்களோடு தொடர்பு அவசியமா ??

Image
வேர்களோடு தொடர்பு அவசியமா ??:-      நம் எல்லோருக்குமே தெரிந்த எளிய அறிவியல் உண்மைதான். செடியோ. கொடியோ, மரமோ எல்லாம் அழகாய் ஆரோக்கியமாய் பூமிக்கு மேலே காட்சியளிக்க தரைக்குள், பூமிக்குள் மறைந்து கிடக்கின்ற அந்த சிறிதும் பெரிதுமான வேர்கள் அவசியம். யாரோ சொன்னதுபோல " தாஜ்மஹாலின் வியக்கவைக்கிற உண்மை அழகு என்பது விழிக்கு தெரிகின்ற வெள்ளை சலவைக்கல்களில் மட்டுமல்ல, விழிக்குத் தெரியாது அந்த வெள்ளை சலவைக்கல்களைத் தாங்கி நிற்கும் அந்த அஸ்திவார அழுக்கு கருங்கற்களில்தான் அதிகம் இருக்கிறது" ( The real beauty of Taj Mahal is not just lies on the white marbles on the above but on the dirty black stones which is on it's below as basement ). இந்த வாசகம் மிக எளிதாக வேர்களின் அவசியத்தை, அவற்றின் தொடர்பின் அவசியத்தை ஒரு பரிணாமத்தில் சொல்கிறது.         வரலாற்றை புரட்டிப் பார்க்கையிலும் இந்த உண்மை புலப்படும். தனது வரலாற்றை, கலாச்சாரத்தை, வாழ்வியலை, தனித்தன்மையை ஒவ்வொரு நாகரிகமும், சமூகமும் தொடர்ந்து வேர்களின் வீரியத்தை உணர்ந்து புரிந்து ...

நண்பேன்டா நண்பர்கள் பாக்கியராஜும், உய்க்காட்டானும்

Image
நண்பேன்டா நண்பர்கள் பாக்கியராஜும், உய்க்காட்டானும் :-        இந்தவார ஆனந்த விகடனில் வந்திருக்கும் சுகா வின் "ராயல் டாக்கீஸ்" ன் பாதிப்புதான் இந்த பதிவிற்கு பாதி காரணம். மீதி காரணம் நான் நெல்லைக்கு இந்தமுறை சென்றிருந்தபோது எனது நண்பர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் தந்த புரிதல்கள்.      கி.பி.2000 ம் ஆண்டு! நான் எனது பள்ளிக்கல்வியினை முடித்துவிட்டு எடுத்த 780 சொச்சம் மார்க்குக்கு எதாவது கல்லூரியில் சீட்டு கிடைக்குமா? இல்லாவிட்டால் என்ன செய்ய என்ற பயத்தில் பேட்டை ஐ.டி.ஐ ல் எல்லாம் விண்ணப்பம் போட்டு வைத்த பொழுது. கல்லூரி இளங்கலை படிப்புகளை குறித்து ஒரு இழவும் தெரியாது. +2 ல இயற்பியல் 2 புத்தகம் படிப்பதற்கே நாக்கு தள்ளுதே, எப்படி மூணு வருஷம் இயற்பியல மட்டும் படிக்கமுடியும் என்று சிந்தித்த! தருணங்களெல்லாம் உண்டு. அவ்வளவு அறிவாளி நான். இந்த சிந்தனைகளை எல்லாம் கலைத்து, எனக்கு இளங்கலை விலங்கியலில் சேர அழைப்பு வந்துவிட்டது. என்னைப்போன்ற O.C மாணவர்களுக்கு மொத்தம் 7 இடங்கள், விலங்கியல் பிரிவில், அதில் எவனோ புண்ணியவான் சேராமல் போய் என...

பீட்சா குழந்தை

Image
பீட்சா குழந்தை :- அப்பாவும் அம்மாவும் வேலைக்கு சென்றபின் குளிரூட்டப் பட்ட அறைகளில் தனியே தொடங்குகிறது அவளது விளையாட்டு பெண்ணடிமைத்தனம் போதிக்கும் சமையல் பாத்திரங்கள் மட்டுமே மாதிரி விளையாட்டு சாமான்களாய் அவளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன நாள் பூராவும் யாருமற்ற தனிமையில் சோறு பொங்கிவிட்டதாகவும் சாம்பார் வைத்துவிட்டதாகவும் சொல்லிக்கொண்டு இல்லாத யார்யாருக்கோ பரிமாறி விளையாடுகிறாள் அவள் அவ்வப்போது வரும் ஆச்சிகளோ, தாதிகளோ ஆடைமாற்றி உணவு திணித்து போகிறார்கள் அவளது  விளையாட்டூடே அவள் நண்பர்கள் யார் யாரெனக் கேட்கையில் சொல்கிற ஹைடியும் சோட்டா பீனும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் என நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம் அம்மா யாரென்பதிலும் அப்பாவுக்கும் மாமாவுக்குமான அடிப்படை வேறுபாடுகளிலும் அவளுக்கு அவ்வப்போது ஏற்படும் அத்தனை குழப்பம் சுவற்றுப் பல்லிகளும் கரப்பான் பூச்சிகளும் சுதந்திரமாய் சுற்றித்திரியும் குளிரூட்டப்பட்ட அறைக்குள் பெற்றவர்கள் பீட்சாவோடு வருகையில் அவை ஓடி மறைகின்றன அவள் அழத்தொடங்குகிறாள்.